Friday 8 July 2011

சித்திரை சிறப்பு.....


தமிழ்நாட்டு மக்கள் சித்திரை முதல் தினத்தை ஒரு முக்கியமான பண்டிகையாக கொண்டாடுவது வழக்கம். அன்று இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். அன்று சமையலில் வேப்பம்பூ பச்சடியும், மாங்காய் பச்சடியும் செய்யப்பட்டிருக்கும்.
 
வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை. சித்திரை முதல் தினத்தன்று வீட்டை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும். கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும்.
 
வாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும். வாயிற்படி நிலைவாயிலில் மஞ்சள் பூசி, மெழுகி, கோலமிட்டால் திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும்.
 
மஞ்சள், குங்குமம் ஆகிய  இரண்டு நோய்க்கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும். சித்திரை அன்று புத்தாண்டு பஞ்சாங்கம் ஒன்று வாங்க வேண்டும்.  அதற்கு சந்தனம், குங்குமம், பொருட்டு ஆகியன இட்டு, பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும்.
 
குடும்ப சோதிடரையோ, புரோகிதரையோ கொண்டு புத்தாண்டுப் பூஜைகளை செய்ய வேண்டும். பூஜை முடிந்த பின்பு அவர் புத்தாண்டுப் பஞ்சாங்கத்தைப் படிப்பார். அதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
 
இது தொன்றுதொட்டு தமிழகத்தில் நிகழ்ந்து வரும் வழக்கமாகும். இதனையே ஐதீகம் என்று வழங்குவர் சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பார். ஆகையால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
 
ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும். தென் தமிழகத்தை சார்ந்தவர்கள் `விஷுக்கனி காணல்' என்னுமொரு சம்பிரதாயத்தை பின்பற்றி வருகின்றனர். அதாவது, சித்திரை மாதம் பிறப்பதற்கு முந்தைய  தினத்திற்கு முதல்நாள் இரவிலேயே, இரவு சாப்பாடு முடிந்தபிறகு பூஜை அறையை தூய்மை செய்து கோலமிட்டு வைத்து விடுவார்கள்.
 
வீட்டிலுள்ள பொன், வெள்ளி நகைகள், ஆபரணங்கள், பணம், நிலைக்கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய், மலர்கள் முதலிய மங்கலப் பொருள்களை தயாரித்து, ஒரு மனையின் மீது கோலமிட்டு, பூஜைக்குரிய தெய்வத்தின் முன் வைப்பர்.
 
அரிசி, பருப்பு, வெல்லம், பலா, மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றையும் வைப்பர். மறுநாள் காலை அதாவது சித்திரை மாதப் பிறப்பன்று அதிகாலை முதன் முதலாக வீட்டிலேயே வயது முதிர்ந்த பெண் எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி கொள்வார்.
 
பின்பு அவர், பகவான் முன்பு குத்துவிளக்குகளையும், ஊதுவத்திகளையும் ஏற்றி வைப்பார். அதற்கு பின்பு, அவர் வீட்டில் தூங்கும் ஒவ்வொருவரையும் தட்டி எழுப்பி, கண்களை மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பு அழைத்துச் சென்று, கண்களை திறக்கச் சொல்வார்.
 
பூஜைக்குரிய தெய்வத்தையும், புத்தாண்டு நிகழ்ச்சிக்காக பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்வார். இவ்வாறு செய்தால் இனிவரும் நாட்கள் முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியும் மங்கலப் பொருள்கள் செழித்தும் இருக்கும் என்பது நம்பிக்கை.
 
சித்திரை முதல் நாளன்று மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம் பெறும். உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே குதூகலமாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.



No comments:

Post a Comment